Monday, June 29, 2009

நாடோடிகளுக்கு அபார வரவேற்பு.. கிரீடம் சூட்டும் ரசிகர்கள்!

பெயர் தான் நாடோடிகள்... ஆனால் நிஜத்தில் இந்த ஆண்டின் மகுடம் சுப்பிரமணியபுரம் புகழ் சசிகுமார் நடித்த நாடோடிகள் திரைப்படத்துக்குத்தான் என்பது உறுதியாகி விட்டது.

நேற்று வெளியான இந்தத் திரைப்படத்துக்கு அடுத்த வாரம் முழுக்க முன்பதிவு முடிந்துவிட்டது. திரையிட்ட அத்தனை இடங்களிலும் ஹவுஸ்ஃபுல் போர்டு தொங்குகிறது.

தொடர்ந்து இரு தோல்விப்படங்கள் கொடுத்த இயக்குநர் சமுத்திரக்கனி இந்த வெற்றியால் நிம்மதிப் பெருமூச்சு விட, ஒரு இயக்குநராக, தயாரிப்பாளராக மற்றும் நடிகராக அடுத்தடுத்து வெற்றிக் கொடி நாட்டிய மகிழ்ச்சியில் சிரிக்கிறார் சசிகுமார்.

இந்தப் படத்தின் கதை உருவாக்கம் மற்றும் அதை சமுத்திரக் கனி காட்சிப்படுத்தியுள்ள விதம், குறிப்பாக நடிப்புக்கு இந்தப் படத்தில் அவர் தந்துள்ள முக்கியத்துவம் போன்றவை ரசிகர்களை படத்துடன் ஒன்றிப் போகச் செய்துவிட்டன.

நீண்ட நாளைக்குப் பிறகு தமிழில் யாதார்த்தம் பிளஸ் கமர்ஷியல் என சகல அம்சங்களும் கலந்த படமாக வந்துள்ள நாடோடிகளுக்கு இப்போதே கூடுதல் பிரிண்டுகள் கேட்டு விநியோகஸ்தர்கள் நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு படத்தின் வெற்றியை உறுதி செய்வதே அந்தப் படம் வெளியான சில தினங்களுக்குள் இப்படி கூடுதல் படப்பெட்டி கேட்டு வரும் விநியோகஸ்தர்கள்தான் என்தால் நாடோடிகள் குழு சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறது.

No comments:

Post a Comment