Thursday, July 2, 2009

ஜாக்சன் தாயாரிடம் குழந்தைகள்-தற்காலிக ஒப்படைப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: மறைந்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகள் ஜாக்சனின் தாயார் காத்ரினிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் சமீபத்தில் மறைந்தார். அவரது மறைவில் பல சந்தேகங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து அவரது மூன்று குழந்தைகளான பிரின்ஸ் மைக்கேல் (12), பாரிஸ் மைக்கேல் (11) மற்றும் பிரின்ஸ் மைக்கேல் (7) ஆகியோரை யாரின் பராமரிப்பில் வளர்ப்பது என்ற கேள்வியும் எழுந்தது.

இதையடுத்து ஜாக்சனின் குடும்ப வக்கீல் குழந்தைகள் ஜாக்சனின் தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி லாஸ் ஏஞ்சல்ஸ் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

அப்போது, ஜாக்சனின் மறைவுக்கு பின் அந்த குழந்தைகளை பாதுகாத்து வரும் ஜாக்சனின் தாயார் காத்ரின் ஜாக்சனிடம் அவர்களை தற்காலிகமாக ஒப்படைக்க உத்தரவிடுவதாக நீதிபதி மிட்செல் பெக்லாப் தீர்ப்பளித்தார்.

அதேபோல், ஜாக்சனின் சொத்துக்களுக்கும் அவரது தாயாரை பாதுகாவலராக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்த மைக்கேல் ஜாக்சனின் குடும்ப செய்தி தொடர்பாளரான வக்கீல் லான்டெல் மெக்மிலன் கூறுகையில்,

முதல் இரண்டு குழந்தைகளுக்கு தாயான மைக்கேல் ஜாக்சனின் இரண்டாவது மனைவியான டெபோரா ரோ இதுவரை குழந்தைகளை கேட்கவில்லை. இந்த குழந்தைகளை அவரிடம் ஒப்படைத்தால் அவர்களுக்கு தீங்கு விளையலாம்.

அந்த குழந்தைகள் தங்களது பாட்டியிடம் இருப்பது அவர்களுக்கு நல்லது. ஜாக்சனின் தாயார் மற்ற குழந்தைகளிடமே அன்புடன் இருக்க கூடியவர். தனது பேரக் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்வார் என்றார்.

இன்று உயில் பிரிக்கப்படும்...

ஜாக்சனின் மானேஜர் பிராங் டி லியோ கூறுகையில், ஜாக்சனின் உயில் இன்று பிரித்து பார்க்கப்படும். அதில் அவரது விருப்பங்களும், குழந்தைகள், தாயார் ஆகியோருக்கு அவர் ஒதுக்கியிருக்கும் பணம். தனது மறைவுக்கு பின் தனது குழந்தைகள் யாருடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளிட்டவை தெரிய வரும்.

ஜாக்சன் தனது தாய் மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவரது குழந்தைகள் தொடர்ந்து அவரிடம் இருப்பது தான் நல்லது என்றார். ஆனால், அந்த உயில் எப்போது தயாரிக்கப்பட்டது என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் முதல் இரண்டு குழந்தைகளும்ஜாக்சனுக்கு பிறக்கவில்லை என கூறிய ஜாக்சனின் இரண்டாவது மனைவி டெபோரா ரோவின் வக்கீல் கூறுகையில்,

தற்போது டெபோரா, ஜாக்சனின் மறைவினால் அந்த குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தான் அதிகம் சிந்தித்து வருகிறார். அந்த குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நல்லபடியாக இருக்க வேண்டும், ஜாக்சனின் ஆத்ம சாந்தி அடைய வேண்டும் என அவர் விரும்புகிறார்.

உடல் அடக்கம் தாமதமாகும்-தந்தை...

மைக்கேல் ஜாக்சன் மரணத்தில் சந்தேகம் எழுந்ததை அடுத்து அவரது குடும்பத்தார் அவரது உடலுக்கு இரண்டாவது முறையாக் பிரேத்யேக டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்தனர்.

இதன் அறிக்கை வந்த பின்னர் தான் அவரது உடல் அடக்கம் செயயப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த அறிக்கை கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அவரது உடல் அடக்கமும் தள்ளி வைக்கப்படுவதாக தெரிகிறது.

இது குறித்து ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் கூறுகையில்,

ஜாக்சன் உடல் எப்போது அடக்கம் செய்யப்படும் என தற்போது கூற முடியாது. இன்னும் சில நாட்கள் ஆகலாம். இறுதி சடங்கு தொடர்பாக இதுவரை எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment