Thursday, July 2, 2009

ஜாக்சன் உடல் அடக்கம் நெவர்லேன்டில் கிடையாது - ரசிகர்கள் ஏமாற்றம்

லாஸ் ஏஞ்சலெஸ்: மைக்கேல் ஜாக்சனின் உடல் அவரது பண்ணையான நெவர்லேன்டில் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது இன்னும் முடிவாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குவிந்துள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஜாக்சன் மரணம் குறித்த சர்ச்சையால் அவரது உடலை ரசிகர்கள் பார்வைக்கு வைப்பது தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் நாளை ஜாக்சனின் உடல் அவரது பண்ணையான நெவர்லேன்டில் பார்வைக்கு வைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

ஏற்கனவே இதை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெவர்லேன்டில் குவிந்துள்ளனர். நாளை ஜாக்சனின் உடலை கடைசி முறையாக தரிசித்து விட வேண்டும் என ஆர்வத்துடன் உள்ளனர்.

ஆனால் இப்போது திடீரென அந்தத் திட்டம் ரத்தாகி விட்டதாம். இதுகுறித்து ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்னர்.

உடல் அடக்கம் குறித்து ஜாக்சன் குடும்ப செய்தித் தொடர்பாளர் கென் சன்ஷைன் கூறுகையில், வெள்ளிக்கிழமை வரை நெவர்லேன்டில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்கப் போவதற்கான அறிகுறிகள் இல்லை, அப்படி ஒரு திட்டமும் இதுவரை இல்லை என்றார்.

இதற்கிடையே, லாஸ் ஏஞ்சலஸிலேயே ஜாக்சனின் உடல் அடக்கம் நடைபெறும் எனவும் ஒரு தகவல் கூறுகிறது.

நெவர்லேன்ட் எஸ்டேட்டுக்கு ஜாக்சன் மட்டும் உரிமையாளர் இல்லை. தாமஸ் பாரக் என்ற கோடீஸ்வரரும் இதில் பங்குதாரர் ஆவார். எனவ அவரிடம் ஜாக்சன் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாம். இருப்பினும் இதுதொடர்பாக சிக்கல் நிலவுவதால்தான் அங்கு உடல் அடக்கம் நடைபெறாது எனக் கூறப்படுகிறது.

ஜாக்சன் வீட்டில் சக்தி வாய்ந்த மருந்து கண்டுபிடிப்பு..

இதற்கிடையே, அறுவைச் சிகிச்சை போன்ற சமயங்களில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த மயக்க மரு்நது ஒன்று ஜாக்சன் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இது அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டால் உயிருக்கே உலை வைத்து விடுமாம்.

அந்த மருந்தின் பெயர் புரபோபால். அறுவைச் சிகிச்சைக்கு முன்பு இந்த மருந்து நோயாளிகளுக்கு அளிக்கப்படுவது வழக்கம். ஆனாலும் அளவு அதிகமாகி விட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

இந்த மருந்து ஜாக்சன் வீட்டில் இருந்ததாக ஒரு இணையதளம் தெரிவித்துள்ளது. இது எப்படி ஜாக்சன் வீட்டுக்கு வந்தது. இதை ஜாக்சன் பயன்படுத்தி வந்தாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment