Thursday, July 2, 2009

வி‌ஷால் மீது லிங்குசாமி புகார்

விஷாலின் முதல் படம் செல்லமே என்றாலும், அவரை இன்றுள்ள ஆக்ஷன் அந்தஸ்துக்கு உயர்த்திய படம் சண்டக்கோழி. லிங்குசாமி இயக்கிய இந்தப் படம் வி‌ஷாலுக்கு நல்ல விலாசமாக அமைந்ததை யாரும் மறுக்க முடியாது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வி‌ஷாலுக்கு நல்ல அறிமுகத்தை இப்படம் ஏற்படுத்தி தந்தது.

சண்டக்கோழி படப்பிடிப்பு முடியும் தருவாயில் படத்தை தயா‌ரித்த வி‌ஷாலின் அண்ணனுக்கும் லிங்குசாமிக்கும் முட்டிக் கொண்டது. படத்தின் பட்ஜெட் லிங்குசாமியால் எகிறிவிட்டதாக வி‌ஷால் தரப்பு குற்றம்சாட்டியது. படத்தின் விளம்பரங்களிலும் லிங்சாமியின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது. படம் அவர்கள் எதிர்பார்த்ததைவிட சூப்பர்ஹிட்டானதைத் தொடர்ந்து இந்தப் பனிப்போர் முடிவுக்கு வந்தது.

சண்டக்கோழி வெளிவந்து பல வருடங்கள் ஆனபிறகும் தூறல் நிற்காத தூவானமாக மீண்டும் பிரச்சனை. கன்னடத்தில் நடிகர் அர்ஜுன் தயா‌ரிப்பில் வாயுபுத்ரா என்ற படம் தயாராகிறது. அர்ஜுனின் சகோத‌ரி மகன் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தின் கதைதான் பிரச்சனை.

சண்டக்கோழி படத்தின் கதையை வி‌ஷால் தரப்பிலிருந்து முறைப்படி வாங்கி வாயுபுத்ராவை உருவாக்கி வருகிறார்கள். இந்த ‌ரிமேக் விவகாரம் சண்டக்கோழி கதையின் பிரம்மா லிங்குசாமிக்கு அறிவிக்கப்படவில்லை. ஒரு படத்தின் ‌ரிமேக் உ‌ரிமையை பிற மொழிக்கு விற்கும் போது கணிசமான ஒரு பகுதி படத்தின் கதையை எழுதியவருக்கு கொடுக்க வேண்டும். இது சண்டக்கோழி விவகாரத்தில் நடக்கவில்லை.

கொதித்துப்போன லிங்குசாமி, என்னுடைய கதையை என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி இன்னொருவருக்கு கொடுக்கலாம் என போர்கொடி தூக்கியிருக்கிறார். தயா‌ரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு இதற்கொரு நல்ல தீர்ப்பு சொல்லும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது பஞ்சாயத்து நடந்து வருகிறது.

No comments:

Post a Comment