Showing posts with label Old is Gold. Show all posts
Showing posts with label Old is Gold. Show all posts
Saturday, October 19, 2013
கதவில்லா வீட்டில் வசித்துவரும் கட்டபொம்மனின் வாரிசு!
ஏழ்மை காரணமாக கதவில்லா வீட்டில் வசித்துவரும் கட்டபொம்மனின் வாரிசு ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு
"தருக்கர்கள் சிலரால் தமிழ் தாழ்வுற்று இருப்பினும் எதிர்காலத்திலே இளம் இளம் காளையர்கள் உயிராக பேணுபவர் வருவர் உன் உயர்வை உயர்த்துவர்" என்று தூக்கு கயிற்றை முத்தமிட்டு கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கில் தொங்கிய வரலாற்றை சினிமாவில் பார்த்தும், புத்தகங்களில் படித்தும்
பிரமித்தோம்... தமிழகம் சென்றால் பாஞ்சாலம் குறிச்சிக்கு சென்று அந்த வீரம் விளைந்த மண்ணை மிதித்து தொட்டு கும்பிட எல்லோருக்கும் ஆசை இருக்கும். தமிழர் வரலாறுகளில் வீரம் மிகைப்படுத்தப்பட்டும் மகிமைப்படுத்தப்பட்டும் எழுதப்பட்டிருப்பதால் அதற்கு அப்படி ஒரு சிறப்பு!
சிவகங்கை சீமையிலே களமாடிய வேலுநாச்சியாரையும் வெள்ளையனின் ஆயுதக்கிடங்கை துவம்சம் செய்து அதை சிதறடித்த வீரப்பெண் குயிலியையும் கூட நம்மவர்கள் இன்றுவரை மறக்கவில்லை. ஆனால் இந்த வீரம் செறிந்தவர்களின் சந்ததியினருக்கு என்ன நடந்தது என்று தேடிப்பார்த்ததுண்டா?
ஒருமுறை தேடிப்பார்த்தபோது, இலங்கை மன்னன் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் வாரிசுகளில் ஒருவர் வேலூர் தியேட்டர் ஒன்றில் டிக்கட் கிழித்துக் கொண்டிருப்பதை வெளிக்கொண்டு வர முடிந்தது. எனவே இந்த கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு என்ன நடந்தது என்று பார்க்கவேண்டாமா?
அண்மையில் வேலூரில் நடந்த ஒரு பாரம்பரிய விழாவில் கட்டபொம்மனின் வாரிசான வீமராஜா என்கிற ஜெகவீரபாண்டி கட்டபொம்முவை சந்திக்கும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
நல்ல உயரமான உருவம், வீரத்தின் அடையாளமாக முறுக்கிய மீசை. தலையில் முண்டாசு, மடித்துக்கட்டிய வெள்ளை வேட்டி, சட்டை. இடுப்பில் வாள் ஏதும் இல்லை. ஆனால் அவரின் பாதணி மட்டும் மன்னர் காலத்தை ஞாபகப்படுத்தியது. தோளில் தொங்கும் ஒரு பழைய பை அதில் செல்லரித்து மக்கிப்போன சில படங்கள். கலைஞர், வைகோ, விஜயகாந்த் என அரசியல் தலைவர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்...
இதுதான் நான் பார்த்த கட்டபொம்மனின் வாரிசு கட்சியளித்த விதம்.
"எனது பாட்டன் கட்டபொம்மன் வெள்ளைக்கார பயலுகள ஓட ஓட விரட்டி அடித்தான். ஆனால் எட்டப்பனின் காட்டிகொடுப்புதான் அவனை விழவைத்தது. இல்லையென்றால் பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு பிடி மண்கூட அந்த பயலுகளுக்கு கிடைத்து இருக்காது" என்று இன்றைக்கும் வீரமாக பேசி மீசை முறுக்குகிறார் வீமராஜா. எழுபத்தி மூன்று வயதிலும் ரொம்பவும் தைரியமாகத்தான் இருக்கிறார். அரசு மாதம் தோறும் தரும் ஆயிரம் ரூபாயில் தான் இவரின் வாழ்க்கை ஓடுகிறதாம்...
"நமக்கு வேலைக்கு போக முடியாதுங்க. அரசாங்கம் மானியம்னு ஆயிரம் தாரான். அது சாப்பாட்டுக்கே போதலிங்க... மன்னரின் கோட்டையை பார்க்க வாராங்க, அப்படியே என்னையும் பார்த்து போட்டோவும் பிடித்து என் கை செலவுக்கு ஏதாவது கொடுக்கிறாங்க..."
கேட்ட எனக்கு ஒரு மாதிரி இருந்தது.
வீமராஜாவுக்கு ஆணும், பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள். மகள் திருமணம் முடித்து குடும்பமாகிவிட்டாராம். மகன் பெயர் கணபதி ராஜா என்கிற ஜெகவீர ராம கட்டபொம்மன். ஆனால் தனக்கு பிறகு கட்டபொம்மனின் வாரிசாக வரக்கூடிய எந்தத் தகுதியும் அவனுக்கு இல்லை. அதனால் அவனைப் பற்றி பேசாதீர்கள் என்று கொஞ்சம் கடுப்பானார் வீமராஜா.
அரசாங்கம் கட்டிக்கொடுத்த ஒரு சிறிய வீட்டில்தான் வீமராஜா குடியிருக்கிறாராம்.
"வீடு ஒரு தடவை தீப்பிடித்ததில் அதன் கூரை எரிந்து விட்டது. அதன் பிறகு சிங்கப்பூரிலிருந்து வந்த பூங்கொடி பெருமா நாயக்கர் என்பவர்தான் என்னைத் தேடி வீட்டுக்கு வந்து அஸ்பெஸ்டஸ் கூரை போட்டுத் தந்தாரு. அத்தோடு யாராவது வீட்டுக்கு வந்தா அமர்வதற்கு ஒரு கயிற்று கட்டிலும் வாங்கித் தந்தாரு. அரசாங்கம் கட்டித்தந்த வீடு ரொம்பவும் சின்னதா இருந்ததால் அதை கொஞ்சம் பெரிசா கட்டுவதற்கு சென்னைக்கு போய் நடிகர் சிவகுமார் அலுவலகத்தில் மனுக்கொடுத்திட்டு வந்தேன். அவரு ரொம்ப நல்ல மனுஷன். நான் கேட்டபடி செய்யச் சொல்லி திருநெல்வேலி ரசிகர் மன்றத்துக்கு பணம் அனுப்பி இருக்காரு. ஆனா ரசிகர் மன்றத்து ஆட்கள் அந்த பணத்திற்கு ரொம்ப சின்னதா ஒரு அறையை கட்டி மிச்ச பணத்தை சாப்பிட்டுட்டானுங்க...!
அந்த அறையை சீராகவும் அமைக்கப்படலை. மதில் கட்ட பயன்படுத்தும் புளக்கல்லை வச்சு வீடு கட்டியிருக்கானுங்க..." என்று புலம்பும் இவரின் வீட்டின் கதவு செல்லரித்து விழுந்து விட்டதாம்.
"இப்போ கதவில்லா வீட்டில்தான் நம்ப வாழ்க்கை போகுது. இரவானா நாயும் பேயும் வீட்டுக்குள் வருதுங்க... இது பற்றி அரட்டை அரங்கம் நடத்த வந்த டீ. ராஜேந்தர் கிட்டே போய் சொன்னேன். இதைக் கேட்ட அவரு காட்டு ராணி கோட்டையிலும் கதவுகள் இல்லை. இங்கே கட்டபொம்மன் வாரிசு வீட்டிலயும் கதவுகள் இல்லைன்னு காமடி பண்ணினாரு. அவருக்கிட்ட கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை வைக்கணும்னு சொல்லியிருக்கேன். செய்யலாம்னு சொல்லியிருக்காரு. பார்க்கலாம்," என்று பெருமூச்சு விடும் அவரிடம் கட்டபொம்மனின் சொத்துக்கள் ஏதும் இல்லையா என்று கேட்டோம்.
"சொத்து என்று ஏதும் இல்லிங்க... மன்னரை கைது செய்த பிறகு மன்னரின் ரத்த பந்தங்களை திருச்சி கோட்டைக்கு பக்கத்திலுள்ள ஒரு சிறைச்சாலையில் எழுபது வருடமாக அடைத்து வைத்திருந்தார்கள். அதன் பிறகு எங்கள் உறவுக்காரர்களை ஊருக்குள் விடவில்லை. பத்து மைல் தள்ளியே வைத்திருந்தார்கள். சக்காரக்குடியில் குடியமர்த்தி இருந்தார்கள். சொத்தெல்லாம் வெள்ளைக்கார பயலுகளும் எட்டப்பனும் சுருட்டிட்டு போயிட்டானுங்க.." என்றவரிடம் பாஞ்சாலங்குறிச்சியில் நடந்த சண்டையில் கட்டபொம்முவின் குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக சொல்கிறார்களே அப்போ நீங்க எப்படி வாரிசாகும்? என்று கேட்டோம்.
"இல்லை. சண்டையில் கட்டபொம்மனின் மனைவி கொல்லப்படவில்லை. மகாராணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். அப்போ ராணியின் தந்தை கெடு வெட்டூர் நாயக்கர் தன் மகளை தேவி ஜக்கம்மாவின் பாதம் தொட்டு வணங்கி அந்த திருநீறை மகளின் நெற்றியில் இட்டு கீழவாசல் வழியாக தப்பிச் செல்ல பணித்திருக்கிறார். அவரும் தேவி ஜக்கம்மாவின் துணையோடு வெளியேறி சக்காரகுடியில் இருந்த ஒல்லிக் கவுண்டர் வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார். ஆனால் சில நாட்களில் மாடு மேய்க்கும் ஒரு பெண்ணினால் ராணி காட்டிக் கொடுக்கப்பட்டு வெள்ளையர்களால் கைதாகி இருக்கிறார். அவரை பல்லக்கில் வைத்து சுமந்து சென்ற வெள்ளையர்கள் திருச்சியில் வீட்டுக்காவலில் வைத்து இருந்தார்களாம்.
அவருக்கு அந்தக்காலத்தில் மாதம் தோறும் 2.50 சதம் மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது. பிறகு அவருக்கு இரட்டைக் குழந்தை பிறந்ததாம். ஒரு பண்டிகை நாளில் வெள்ளைக்காரன் இனிப்புகளை ஒரு தட்டிலும், மறு தட்டில் இரண்டு வாள்களையும் வைத்து விரும்பியதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்களாம்.
இரு சிறுவர்களில் ஒருவன் ஓடிச்சென்று போர் வாளை எடுத்தானாம். அதைப்பார்த்து மிரண்டுப்போன வெள்ளையன், அந்தக் குழந்தைதான் அடுத்த கட்டபொம்மன் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவனை வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்று படிக்க வைப்பதாக அழைத்துச் சென்று விட்டார்களாம். மற்ற பையனை திருச்செந்தூர் காவடி பிரார்த்தனைக்கு நேர்ந்து இருப்பதாகச் சொல்லி ஜக்கம்மா அவனை தன்னோடு வைத்துக் கொண்டார்களாம். சிறையில் பிறந்த கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு கம்பனி செல்வம் என்றுதான் பெயர் வைத்திருந்தார்களாம்... அந்தப் பரம்பரையில் வந்த ஐந்தாவது தலைமுறைதான் நான். வெள்ளைக்காரன் கொடுத்த மானியத்தை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது நிறுத்தி விட்டார்கள்.
எனக்குத் தெரிய எங்க பெரியப்பா சுப்பரமணியம் அந்த பென்ஷனை வாங்கி வந்தாரு. அவரின் மரணத்தோடு அதுவும் நின்றுவிட பிறகு அண்ணாத்துரை முதலமைச்சரானதும் நான் ஒரு கடிதம் எழுதினேன். அவரிடமே கொடுத்தேன். அதைப்பார்த்த அவர், 'கட்டபொம்மன் வாரிசுக்கும், வாஞ்சிநாதன் மனைவிக்கும் இந்த மானியத்தை கொடுக்கலாம். ஆங்கில சர்க்கார் கொடுத்ததை சொந்த சர்க்கார் நிறுத்தியது குற்றம்' என்று ஒரு ஃபைலில் எழுதி வச்சாரு. அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் அதை நிறைவேற்றினார். அவருதான் கட்டபொம்மனின் இடிந்த மாளிகையை கட்டி எழுப்பினாரு.
74ல் எனக்கு வீடுகட்டித் தந்தவரும் அவருதான்... ஆனா இப்போ கயத்தாறில் கட்டபொம்மனுக்கு மணி மண்டபம் கட்டப்போறதா அம்மா அறிவித்து இருக்காங்க..." என்று சொல்லும் வீமராஜா நன்றாக அருள்வாக்கும் சொல்கிறார். "தேவி ஜக்கம்மாவை நினைத்தா உள்ளதை உள்ளப்படி சொல்வேணுங்க..." என்கிறார். இது தவிர தமிழர் கலாசார நிகழ்வுகளுக்கும் வீமராஜா சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்.
வருடம்தோறும் கட்டபொம்மன் நினைவு தினத்திலும் தேவி ஜக்கம்மா திருவிழாவிலும் வீமராஜாதான் கதாநாயகராம். ஆனால் வீமராஜாவின் வாழ்க்கை மிகவும் வறுமைகோட்டிலேயே பயணிக்கிறது. நாடாளவேண்டியவர் இப்படி நாதியற்று...
- நேர்காணல்: மணி ஸ்ரீகாந்தன்
Wednesday, April 22, 2009
Masala movie actress photos

Find more pictures: Urmila matondkar



Find more pictures: Swrnamalya


View more related photos: Seema




Find more pictures: Rani Mukherjee






View more stills: Vimala raman
Subscribe to:
Posts (Atom)
