Showing posts with label பிரபாகரன். Show all posts
Showing posts with label பிரபாகரன். Show all posts

Monday, June 29, 2009

பிரபாகரன் பெற்றோர் மீது வழக்கு-இலங்கை திட்டம்

கொழும்பு: விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தந்ததாக கூறி பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாம்.

தற்போது வவுனியா அகதிகள் முகாமில் தனித்து வைக்கப்பட்டுள்ளனர் வேலுப்பிள்ளையும், பார்வதி அம்மாளும். அவர்களை விரைவில் கொழும்புக்குக் கொண்டு செல்லவுள்ளனர்.

அங்கு கொண்டு செல்லப்பட்டதும் அவர்கள் மீது வழக்கு தொடரப்படவுள்ளதாம்.

இருவர் மீதும் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை. இருப்பினும் பிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி வழக்கு தொடரப்படும் எனத் தெரிகிறது.

Monday, June 22, 2009

இல்லாத இயக்கத்துக்கு எதற்கு தடை?-சீமான்


விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடையை விலக்க வேண்டும். இல்லாத இயக்கம் என்று அறிவித்துவிட்ட பிறகு புலிகளை தடைசெய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்றார் இயக்குநர் சீமான்.

கோவை புலியகுளத்தில் தமிழர் உரிமை முன்னணி சார்பில் ஈழ ஆதரவாளர் மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது:


அமெரிக்க ஐக்கிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்திருந்தாலும், அந்த மக்கள் தனி ஈழம் கேட்டுப் போராட உரிமை தந்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அதற்குக் கூட உரிமையில்லை. எமது இன மக்கள் அங்கே பல்லாயிரக்கணக்கில் செத்து மடிவதை எதிர்த்துக் குரல் கொடுத்தால் சிறையில் அடைக்கிறார்கள். ஈழ மக்கள் விடுதலைக்காக குரல் கொடுக்க ஒரு இயக்கம் காண்பதைக் கூட இந்த அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா அரசு மறுத்து விட்டது. இலங்கையில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள். அப்படியிருக்கும் போது இல்லாத இயக்கத்துக்கு எதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை ஆஸ்திரேலிய அரசு கேட்கிறது. ஆஸ்திரேலியாவின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதையேதான் இப்போது நாங்களும் கேட்கிறோம்... இல்லாத இயக்கத்துக்கு தடை எதற்கு இந்தியாவில்?

இன்றைக்கு பிரபாகரன் குறித்தும், புலிகள் குறித்தும் பல வித கேள்விகள் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும், என்றார் சீமான்.

நிகழ்ச்சியில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்.